தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்–2 தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் 18–ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) சென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை பூர்த்தி செய்யுமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.
தகுதியானவர்கள்
அரசு தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட பிளஸ்–2 தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதவும் (எச் வகையினர்), 10–ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும், 1.4.2013 அன்று 16½ வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாகவும் (எச்.பி. வகையினர்) தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தங்கள் படத்தை அப்லோடு செய்து முழுமையாக விவரங்களை பூர்த்தி செய்த பிறகு அவர்களுக்கு பிரத்யேக விண்ணப்ப எண் வழங்கப்படும். இந்த விண்ணப்ப எண்ணை தேர்வர்கள் உடன் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தித்தான் அவர்கள் புகைப்படத்துடன் பதிவு செய்த விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தையும், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய செலானையும் டவுன்லோடு செய்ய முடியும்.
கடைசி நாள்
மேலும் இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும் தேர்வுத்துறையிடம் முறையீடு செய்யவோ, ஹால்டிக்கெட் பெறவோ முடியும். டவுன்லோடு செய்த விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து தங்கள்வசம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் புகைப்படத்தை ஒட்டி, அந்த படத்தில், கடைசியாக படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து சான்றொப்பம் பெற வேண்டும். ஆன்லைனில் 7–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கட்டணம்
தேர்வுக்கட்டணத்தை பொருத்த வரையில், எச் வகையினர் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வுக்கட்டணமாகவும், அதோடு இதர கட்டணமாக ரூ.35–ம் செலுத்த வேண்டும். எச்.பி. வகையினருக்கு தேர்வுக்கட்டணம் ரூ.150. இதர கட்டணம் ரூ.35 ஆகும். கேட்டல் அல்லது பேசுதல் திறன் தேர்வுக்கான கட்டணம் ரூ.2. மொத்தம் ரூ.187.டவுன்லோடு செய்யப்பட்ட செலான் மூலம் தேர்வுக்கட்டணத்தை 19–ந் தேதி வரை கோர் பேங்கிங் வசதி உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் கட்டலாம்.
எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?
நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தனித்தேர்வர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திலும், இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலும் (சனிக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) 19–ந் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.இவ்வாறு வசுந்தராதேவி கூறியுள்ளார்.