முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல்


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் முதல் வாரம் துவங்கிவிடும். செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி, முதல் வாரத்தில் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பிப்ரவரியில் செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, ஜனவரி, 15ம் தேதிக்குள், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும். இதனால், தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது.
பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் பெயர், பள்ளி, குரூப் விவரம், தேர்வெழுதும் பாடங்கள், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள், மாவட்ட வாரியாக, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை, இம்மாதம், 30ம் தேதிக்குள் முடித்து, பட்டியல்களை ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாணவ, மாணவியர் பெயர் பட்டியல், விரைவில், மாவட்டங்களில் இருந்து வர ஆரம்பித்துவிடும். இம்மாத இறுதியில், எத்தனை பேர், பொதுத்தேர்வை எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும். பிளஸ் 2வை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வில், கூடுதலாக, 30 ஆயிரம் பேர் முதல், 40 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கிறோம் இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முந்தைய பிளஸ் 2 தேர்வுகள், 1,974 மையங்களில் நடந்தன. புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி கோரி, பள்ளி நிர்வாகங்கள், தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்து வருகின்றன. 100 மையங்கள் வரை, புதிதாக அனுமதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 10.84 லட்சம் பேர் எழுதினர்; 3,033 மையங்களில், தேர்வுகள் நடந்தன. வரும் தேர்வில், 11.20 லட்சம் பேர் வரை, இத்தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் துவங்க வேண்டிய தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி, 23ம் தேதி வரை நடந்தது.
இந்த அட்டவணை, வரும் பொது தேர்வுக்கு பொருந்தாது எனவும், வழக்கம்போல், மார்ச், 20ம் தேதிக்குப் பின் துவங்கி, ஏப்ரல், 10 தேதிக்குள், தேர்வு முடிவடையும் வகையில், அட்டவணை இருக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.