முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

அரசுப் பள்ளி மாணவர் ஜப்பான் சுற்றுலாவுக்கு தேர்வு


கிராமப்புற பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர், கல்வித்துறை சார்பில் ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், அவிநாசி அருகே கருவலூரை சேர்ந்த சங்கர், கருவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 482 மதிப்பெண் பெற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றார். அதற்காக, கல்வித்துறை சார்பில் ஜப்பான் செல்ல தேர்வு பெற்றுள்ளார்.
தலைமையாசிரியர் சுப்ரமணியம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் முதலிரண்டு இடம் பிடிப்பவர்களை, வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்ல பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. மாவட்டத்துக்கு தலா 2 பேர் வீதம், தமிழகம் முழுவதும் 64 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில், தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்து வருபவர்கள் மட்டுமே வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில், தொடர்ச்சியாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர் சங்கர், ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரோடு சேர்த்து மொத்தம் ஆறு பேர், அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து ஜப்பான் செல்கின்றர். 20 நாள் பயணத்தில், அந்நாட்டின் கல்வி முறை, பாரம்பரியம், கலாசாரம், மாணவர்கள், வாழ்க்கை முறை குறித்து அறியவுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாவுக்கு, எங்கள் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது, மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் சங்கர் கூறுகையில், "ஜப்பான் செல்ல கிடைத்த வாய்ப்பை நினைத்து சந்தோஷப்படுகிறேன். இதை, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். பள்ளி கல்வித்துறை, தலைமையாசிரியர், பெற்றோருக்கு நன்றி" என்றார்.
ரோட்டரி கிளப் சார்பில் அமெரிக்காவின் "நாசா&'வுக்கு செல்லும் வாய்ப்பையும் மாணவர் சங்கர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.