முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை


தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாடம் நடத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளன.

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள, நடுநிலைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுகின்றன. கடந்த 2011, ஜூன் மாதத்தில், 344 நடுநிலைப் பள்ளிகளும், 2011 டிசம்பர் மாதத்தில், 710 நடுநிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டன.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் போது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளியும், ஆறு முதல் 10ம் வரை உயர்நிலைப் பள்ளியாகவும் பிரிக்கப்படும்.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், கடந்த ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் இருந்தனர். இதனால் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பினும், நிர்வாகத்தில் குளறுபடிகள் வராமல் தவிர்க்கப்பட்டு விட்டது.
நடப்பாண்டில், அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மாணவர்களும் இருப்பர். இவர்களுக்கு, ஆண்டு துவக்கத்தில் இருந்தே பாடம் நடத்துவது அவசியம். பணியில் இருக்கும் ஒன்றிரண்டு ஆசிரியர்களும், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது, ஒட்டுமொத்தமாக கற்பித்தல் பணி பாதிக்கப்படும்.
ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங்கும் நடைபெறாமல் உள்ளதால், வேறு பள்ளி ஆசிரியர்களும் பொது மாறுதலில் வரவில்லை. இதனால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை பொதுமாறுதல் கவுன்சலிங் மூலமாகவோ அல்லது புதிய நியமனத்தின் மூலமாகவோ நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.